Monday, April 21, 2008

<>தமிழ் உலக விழா!<>


அன்பினிய நண்பர்களே!
வணக்கம்.
தமிழ் உலக விழா!

தமிழ் உலகம் இணைய மேடையில் ஓர் இணையிலா விழா!

தமிழ் உலகம் எடுக்கும் விழா,
பாரதியின் தாசனான பாரதிதாசனுக்கு விழா!

பாவேந்தருக்கு விழாஎடுப்பதில் பேரானந்தப் பெருவெள்ளம்
பொங்கிவழிகிறது!

பாவேந்தரின் நினைவு நாளான ஏப்ரல் 21 துவங்கி அவர்தம் பிறந்த நாளான
ஏப்ரல் 29வரை தமிழ் உலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான சேதியினை பாரதிதாசன் வைய விரி அவையின்
சார்பாக அறிவித்துச் சந்திப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

"தூங்கும் புலியை பறைகொண்டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்"

என்ற பாவேந்தரின் வைரவரிகளுக்கு ஒப்பாக‌
பாரதிதாசன் வைய விரி அவையின் பாரதிதாசன் விழா
ஒவ்வொருவருடமும் தமிழையும் தமிழரையும்
எழுச்சிகொள்ளச் செய்திருக்கிறது.

பாரதிதாசனின் விழாக்களில் கருத்தரங்கம் இருக்கும்
கட்டுரைகளும், கருத்துக்களும் பல்வேரு தலைப்புகளில்
வந்து குவிவதைப் பார்த்துள்ளோம்.

இந்த ஆண்டு கவிதைகள், கட்டுரைகள், பாவேந்தர் குறித்த‌
மலரும் நினைவுகள், பங்கேற்போர் பாவேந்தரை ஆய்வு செய்து
ஆய்வுக் கட்டுரை வடிக்கலாம்.

கடந்த ஆண்டுகளில் தமிழ் உலகில் நடைபெற்ற விழாச்சேதிகளும்
தொடர்ந்து வரும்.

பாவேந்தருக்கு நாமெடுக்கும் இணைய விழா, தமிழ் உலக விழாச்
சிறக்க தமிழ் உலக உறுப்பினர்கள் மட்டுமல்ல பாவேந்தர் பற்றாளர்களை
அழைத்துப் பங்கேற்கவைப்பதுவும் நம் ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.
அவன் எழுதாத பொருளில்லை, சொல்லாத கருதில்லை.

இயற்கையின் எழில், சாதி மதங்களின் கொடுமை, சமுதாயச்சீரழிவு,
பெண்ணினுரிமை, தொழிலார் நலிவு,என பலப் பல பாடியிருக்கிறான்
ஆனால்,
அவன் உள்ளத்தில்,
உடலில்,
உயிரில் இருந்தது தமிழ்,
தமிழ்தான் அவன் மூச்சி,
தமிழர் அவனின் வாழ்வு.
அவன் பாடல்களில் இனிமை, எளிமை, எழிலுண்டு.
பழைய இலக்கிய தமிழுடன், இன்றைய பேச்சு வழக்குமுண்டு.

வற்றாத நீருற்று, பொங்கிவரும் புனல், கட்டவிழ்ந்த காட்டாறு
இவைதான் அவன் கவிதைகள்.
பாரதிதாசன் வாரமென்றாலும் இவ்விழா ஒன்பது நாட்கள் நடக்கும்.
கவிஞர்களும் அறிஞர்களும், அன்பு நெஞ்சங்களும்,
தமிழ் அன்பர்களும் நிறைந்த தமிழுலக
மடற்குழுவில் அதிகம் பங்குபெற்று முன்னெப்போதுமில்லாதவாறு
வெற்றிகாணச் செய்வது இதோ உங்கள் கரங்களில்!

இந்த விழாவில் ஒரு சில பேராசிரியர்கள்
பங்கேற்றுச் சிறப்புச் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தவிழாவிற்கு தலைவர் யார்? வழி நடத்துபவர் யார்?
எல்லாமே நீங்கள்தான்!

விழாச் சிறக்க ஓவ்வொருவரும் ஆலோசனை நல்கி
வழிநடத்திச் செல்லவேண்டும் என்று
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

எட்டுத்திசைகளிலிருந்தும் கிளம்பட்டும் பார் புகழும் பாவேந்தனின் புகழ்!
இமையம் அடைந்த புகழ் வானோக்கி எழும்பட்டும்.
தேனருவிபோல் கவிதை மழைப் பொழியட்டும்!

கருத்துக் குவியல் ம(மா)லையாகட்டும்!

அறிவார்ந்த ஆய்வரங்கம் ஆரம்பம் ஆகட்டும்!

உங்கள்பங்கெடுப்பால் இவ்விழா சிறக்கட்டும்.

முரசு கொட்டட்டும், சங்கு முழங்கட்டும்
விண்ணொடும் உடுக்களொடும்
செம்பரிதி தன்னொடும் பிறந்த தமிழால் அவன்
தகுதி பெற்றதும்,அவனால் தமிழ், தமிழர் தகுதி
பெற்றதும் எடுத்தியம்ப வாரீர்! வாரீர்!! என்று
இருகரம்கூப்பி அழைக்கிறேன்.
ஆல்பர்ட்,
அ.கூ.நா.
பாரதிதாசன் வைய விரி அவை சார்பாக‌.

No comments: