Tuesday, April 22, 2008

பாரதிதாசன் வாரம் - கவிஞர் செலவாளியா?



<>செலவாளிக் கவிஞர் பாரதிதாசன்<>

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாருக்கு பேரறிஞர் அண்ணா
இருபத்தையாயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்த செய்தி
அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த விழாவில் அண்ணா மிகப் பெருந்தன்மையோடு,
"தாங்கள் மிகப் பெரிய கவிஞர் தங்களுக்கு நாங்கள்
நிதியளித்து நீங்கள் பெறுவதுபோல் வாங்கிக் கொள்ளக்கூடாது!

நிதியை ஒரு தட்டிலே வைத்து நாங்கள் நீட்டிக் கொண்டிருக்க
தாங்களே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்!"
எனச் சொன்னார் அப்படியே நிதி வழங்கப்பட்டது.

அந்த விழாவில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வந்திருந்த
பாவேந்தர் அச்சமயம் பன்மொழிப் புலவர் கே.அப்பாத்துரையார்
இல்லத்தில்தான் தங்கியிருந்தார்.

விழாவிற்கு மறுநாள் பாவேந்தர் துணைவியாரிடம்
அப்பாதுரையார் ஒன்றை சொன்னார்.

"அம்மா கவிஞர் பணத்தை ஒரு பொருட்டாக
மதிக்க மாட்டார். இந்த பணத்தை சில நாளிலேயே
தாராளமாக செலவழித்து விடுவார். வீட்டுக்க ஏதாவது
வாங்க வேண்டும் என்றெல்லாம் எண்ண மாட்டார்.

ஆனால், உங்களுக்கென்று இப்போது சில பொருள்களை
வாங்க வேண்டும். அந்தப் பணம் இப்போது என்
பொறுப்பில்தான் இருக்கிறது. கடைக்குச் சென்று
உங்களுக்கு என வேண்டியவற்றை வாங்கிக்
கொள்ளலாம் என்று கூறி தனது குடும்பத்தினருடன்
பாவேந்தரின் துணைவியாரை அழைத்துச் சென்று
சுமார் ஏழாயிரம் ரூபாய்க்கு பாவேந்தர் மனைவி
விரும்பிய நகை, புடவைகளை வாங்கித் தந்தார்.

அந்தப் பணத்தில் அப்பாத்துரையார் வாங்கித் தந்த
பொருள்களை மட்டும்தான் உருப்படியான பொருட்களாய்
இருந்தன. மற்றவையெல்லாம் பாவேந்தர் விருப்பப்படி
செலவழிக்கப்பட்டு விரைவிலேயே காணாமல் போயிற்று.

No comments: