Wednesday, April 23, 2008

<>பேராசிரியர் பெஞ்சமின் லெபோ,பிரான்சு<>



பாரதிதாசனைப் பற்றிய
தவறான கண்ணோட்டம் (பகுதி 1)

பேரா.பெஞ்சமின் லெபோ, பிரான்சு.

தணியாத காதல் தமிழ் மீது கொண்டு அணிஅணியாகத்
தமிழ் உணாச்சிப் பாடல்களைப் புனைந்தவர்
புதுவைக் கவிஞர் பாரதிதாசனார்.

கனகசுப்பு ரத்தினம் எனபது இவர்தம் இயற்பெயர்.
இவரை ஈர்த்த பெருங்கவிஞர் பாரதியார். இந்த ஈர்ப்பின்
விளைவாகத்தான் தம் இயற்பெயரையே பாரதிதாசன் என
மாற்றிக்கொண்டவர். பாரதிதாசன் பற்றித் தவறான கருத்துகள்
பல தோன்ற இப்பெயரே காரணமாயிற்று. பாரதிதாசனின்
வரலாறு சரிவரத் தெரியாத பலர், அவருக்கும் பாரதிக்கும்
இருந்த உறவினைத் திரித்துப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

காட்டாக,
1)பாவேந்தன் என்ற அடையை விடப் புரட்சிக்கவி என்ற
அடையே பாரதிதாசனுக்குப் பொருந்தும் என மிகச் சிறப்பாக
வாதிடும் கவிஞர் கவிஞர் தணிகைச் செல்வன் கூட,
'பாரதிதாசனின் ஆசான் என்று பாரதி கருதப்பட்டாலும்,
பாரதியின் கருத்துகள், பிரான்சு.மலர்ச்சியைச்
சார்ந்தனவாயிருந்தன." என்றுதான் எழுதுகிறார்.
(காண்க : நன்றி கீற்று
ளுரனெயல, 6 ஆயல, 2007 பாரதி எ பாரதிதாசன்).


2) 2005 -ஆம் ஆண்டு மே மாதம் கனடா நாட்டில் கவிஞர்
புகாரி அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அவ்விழாவில் கவிஞர் நூலுக்கு மதிப்புரை வழங்கிய திரு ஜெயபாரதன்
' அழகின் சிரிப்பு நூலை விரித்துக் கவிதைகளை ஊன்றிப் படித்தேன்.

பாரதிக்குத் தாசர் அல்லவா? பாரதியாரைப் போல் இருக்கிறாரா என்று
ஆய்ந்தேன். பாரதியைப் படித்த எனக்குப் பாரதிதாசனின் சில கவிதைகளைப்
படித்த பின், அவர் மீது ஏனோ பிடிப்பு ஏற்பட வில்லை!; "என்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு கிரீதரன் ('பதிவுகள்' ஆசிரியர்) எழுதி
உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் திரு ஜெயபாரதன்,

"...ஆனால் பாரதியின்
நிழலில் தோன்றித் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்
கொண்ட கவிஞர் சுப்புரத்தினம் மெய்யாகப் பாரதியாரின் சீடரா
என்பதைத்தான் நான் சிந்தித்து உளவு செய்கிறேன்.

முதலில் பாரதியின் சீடராய்த் துவங்கிப்
பாதி காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டு வேறு
வடிவில் உலவி வந்தார் பாரதிதாசன் என்பதைத்தான் நான்
கூற விரும்புகிறேன். " என எழுதுகிறார்.

பாரதிதாசன் பற்றிப் பலரும் கொண்டுள்ள (தவறான)
கருத்துகளைத்தான் இவர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது, கனகசுப்பு ரத்தினம் பாரதியாரிடம் பயின்றவர்,
பாரதியின் மாணாக்கர், பாரதியால் உருவானவர்... என்பது
இவர்கள் கொண்டுள்ள கருத்து.

உண்மை என்ன? பாரதி புதுவைக்கு வருமுன்னரே,
கனகசுப்பு ரத்தினம் தம் (தமிழ், பிரஞ்சு) கல்வியை
முடித்து ஆசிரியர் பணியிலும் அமர்ந்துவிட்டிருந்தார்.
கனகசுப்பு ரத்தினம் முறையாகத் தமிழ் (திரு பங்காருசாமிப்
பத்தர் என்னும் புகழ்பெற்ற புதுச்சேரிப் புலவரிடம்) பயின்றவர்.
யாப்பிலக்கணம் நன்கறிந்தவர். கவி புனையும் ஆற்றலும் மிக்கவர்.

ஆனால் பாரதி அப்படி அல்லர். கவிபாடும் வல்லமை இயற்கையாக
அவரிடம் அமைந்திருந்தது. மற்றபடி தமிழை முறையாகப்
படித்தவரில்லை பாரதி, யாப்பும் அறிந்தவர் அல்லர்.

"... பாரதியாருக்குப் பள்ளிப் படிப்பில் மிகுதியாகப் பற்றில்லை...
தொடக்க முதலே பாரதியார் ஆங்கிலக் கல்வி நிலையங்களிலேயே
படித்தார். தனித் தமிழ்; ஆசிரியரிடம் அவர் தமிழ்ப் பாடம் கற்றதில்லை.

" (பாரதியாரின் வாழ்க்கை வரலாறு - டாக்டர் தா.ஏ ஞானமூர்த்தி). பாரதி
பாட்டுக்களில் இருந்த எழுத்துப் பிழைகளை, தட்டும் தளைகளை,
யாப்புக் குறைகளைக் களைந்து திருத்தியவர் கனகசுப்பு ரத்தினம்தாம்!

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்-1 என்ற கட்டுரையில்
திரு வெங்கட் சாமிநாதன் கூறுகிறார்:

"புதுச்சேரியில் பாரதியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்
இன்னும் பலர் இருந்தனர். கவிஞர் பாரதிதாசன் (1891-1964) அவர்களில்
ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக முடிசூட்டப் பெற்றவர்.
பாரதிதாசன் என்றே அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.
கவிஞராக மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. ...
பல பொறுப்புகளைப் பாரதிதாசன்தான் மேற்கொண்டிருந்தார்."

எனவே, பாரதியார் இவரைத் தம் சீடராகப் பார்த்ததும் இல்லை,
சீடராகப் பழகியதும் இல்லை! நண்பராகவும் தோழராகவும்தான்
பார்த்திருக்கிறார், பழகி இருக்கிறார். எனவே கனகசுப்பு ரத்தினம்
தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டாலும், அவர்
பாரதியாருக்குச் சீடராக வாழவில்லை, தம் கவிதை வாழ்வையும்
பாரதி நிழலிலே தொடங்கவில்லை. பாரதியார் புதுவை வாழ்வைத்
தொடங்கும் முன்னரே கனகசுப்பு ரத்தினம் தனக்கென
ஒரு பெயரைப் புதுவையிலே பெற்றிருந்தார்.

பாரதியாரும் கனகசுப்புவும் சந்தித்த அந்த முதற் சந்திப்பை
அடுத்த பகுதியில் காண்போம்.

அச்சமயம் பாரதி சொல்லிய சொல்லைக் கனகசுப்பு
ரத்தினமே பதிவு செய்த வரிகள் :

"கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம்
நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி
செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன்
என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும்
என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக்
கொண்டேன். அவர் கூறிய வார்த்தைகளாவன:

"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"
*******************************************************************

பாரதிதாசனைப் பற்றிய தவறான
கண்ணோட்டம் (பகுதி 2)

தமிழ்க் கவிதையைப் பதிய பாதையில் இட்டுச் சென்ற
பாரதி என்ற அச் சாரதியை,
தமிழைப் பற்றி, தமிழுணர்வைச் சுற்றி,
தமிழ்த் தொண்டாற்றித் தமிழையே போற்றிக்
கங்கையைப் போல், காவிரியைப் போல்
கவிதை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்த
கனகசுப்பு ரத்தினம் சந்தித்த அந்த நிகழ்ச்சி...
நினைத்தாலே அகமெல்லாம் இனிப்பு
படித்தாலோ முகமெல்லாம் சிரிப்பு!
அதனைப் பாவேந்தர்
வடித்திட்ட சொல்லாலே
படித்திட்டால் தானே சிறப்பு!

இதோ கனகசுப்பு ரத்தினமே வருகிறார்
அதனை நமக்குத் தருகிறார் :

"பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில்படித்தவர்களிடையே உலவியிருந்தது.
குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்)அந்தப்
பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான்
கேட்டிருக்கிறேன். என்ஆசைக்கு ஒரு புத்தகம்
கிடைத்தது ஒரு நாள் -
சுதேசக் கீதங்களை நான் படித்து வந்தேன்.
ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன்.
'இந்தியா' பத்திரிகையில் சாத்திர
விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன்
தருமராஜா கோயில் தெரு வளைவுகள்,
குவளையின் கூச்சல் இவை எல்லாம்
சுதேசகீதங்களின் உட்பொருளை எனக்கு
விளக்கின. அதன் பிறகு கொஞ்சம்
விஷயமானஉணர்வோடும்,
'நான் ஓர் இந்தியன்' என்ற
அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப்
பாடமுடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு
நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது.
மாலை 3மணிக்குக் கல்யாணப் பந்தல்
பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில்
நானும்ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன்.
"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ!" என்பதை.
அப்போது என் பின் ஒருபுறமாக,
இதற்குமுன் நான் வீதியில் பார்த்த
சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன.
அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.

வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.
நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற
பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது
பேர் இருக்கும். 30 பேர்வழிகளில்சுமார்
25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையேபார்க்கிறார்கள்!

அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன
என்று எனக்குத் தெரியாது. ஆனால்அவர்
ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம்
என்று தோன்றிற்று.

என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு
நாய்க்கர். பாடினேன்.
அப்போது வேணு நாய்க்கர், "அவுங்க யார்
தெரியுமில்ல?" என்று கேட்டார்.
தெரியாது என்று கூட நான் சொல்லி
முடிக்கவில்லை. ரவிவர்மா படம்:
"நீங்கதமிழ் வாசிச்சிருக்கீங்களோ?"
என்று என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."
'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது, "அவுங்கதானே
அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய
பாரதி என்று சொல்றாங்களே?" என்று
'பரமசிவப் படத்தை' எனக்குஅறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது
என் மூஞ்சியை நான் கண்ணாடிஎடுத்துப் பார்த்துக்
கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர்
அசல் இஞ்சிதின்ற குரங்கு!

பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார்,
நான் அப்போது என்ன பதில் சொன்னேன்
என்பவைகளைக் கேட்டால் அப்போதே
என்னால் சொல்ல முடியாது. இப்போது
என்னால்சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் செல்லிய வார்த்தையை
மாத்திரம் நான் மறந்து போகவில்லை.அது என்
ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த
வார்த்தையை அவர்வெளியிட்டவுடன் என்
நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி
விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி
உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:
"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு
நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து, "இவர்
ரவிவர்மா படத்தில் காணும்பரமசிவம் போல்
இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த
மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று.

அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று.
அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால்பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று
-- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச்சந்தோஷமயமாக்கிவிட்டன.

மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன்
பாரதியார் வீட்டுக்குப் போகப்போகிறேன். மறுநாள்
என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான்
கவலையாய்க்கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு
மாடியில் ஏறிப் போகிறோம்...வீணையின் தொனி.
ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என்
காதில்கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில்
பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக்கொண்டிருக்கும்
சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி
சாமிநாதஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப்
பார்த்தேன்.
நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது
நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு,
"வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார்.
குயில் பாடுகிறது. கேளுங்கோ"என்றார். சிவா
நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர்
வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு.
அதன் பிறகு என்னைப் பற்றியவிவரம் நடந்தது.
கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்"
என்றுபாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக
உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
எனக்குப் பேச்சு அவ்வளவாகப்பிடிக்கவில்லை.
அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப்
புத்தகத்தைப்பார்க்க வேண்டும் என்பதிலேயே
என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது.
மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின்
பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகுஅதைக் கையில்
எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே
என் காலத்தைக் கடத்தியிருந்தவன்.என் ஆசிரியரும்,
புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர்,மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை
இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின்
அங்கத்தினன்.
பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும்
புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற
அபிப்பிராயமுள்ளவன். கடிதம்எழுதும்போதுகூடக்
கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற எண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில்
சேர்த்தது. நானும் பாரதியார் பாடல்கள் எழுதி
வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒருபக்கம்;
என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும்
விஷயமும் ஒருபக்கம். என் உள்ளமும் அதில்
இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய
சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன.
பாரதியாரை,அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள்
வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த
உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த
ராஜுலு நாயுடு பீடிபிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா
நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று.மணியும் 11
ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச்சுட்டிக்காட்டி,
"இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார்.
அதற்குப்பாரதியார், "இல்லாவிட்டால் என்
கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன
இருக்கிறது?" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன்,
சுவாமி" என்றேன். பாரதியார், "சரி,நேரமாகிறதா?
நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்றுகுறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை.
"நமஸ்காரம், நமஸ்காரம்" என்று துரிதமாய்ச் சொல்லிப்
பிரிய எண்ணமில்லாதுபிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள். நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்றுநேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை!"

இப்படியாகத்தான்
அந்த இருபெருங் கவிஞர்களின் சந்திப்பு
நல்லதொரு (திருமண) நாளில் நடந்தது.
அவர்கள் நட்பும் தொடங்கியது, தொடர்ந்தது.

பாரதிதாசனின் கவிதை நடையையே மாற்றியவர் பாரதியார்.
இதனைப் பாரதிதாசனே ஒப்புக் கொள்வதை மேலே படித்து உணர்ந்தோம்.

எங்கிருந்தோ வந்து தமிழ்ச் சாதிதானென்று சொன்ன
அந்தப் பாரதியைப் பைந்தமிழ்ப பாகனை,
நண்பனாய், மந்திரியாய் (த் தன் கவிதைப் பாதையை
மாற்றித் தந்த) நல்லாசிரியனாய்ப் பண்பிலே தெய்வமாய் வாழ்ககையிலே தோழனாய்ப்
பார்த்துப் பழகியவர்தாம் பாரதிதாசனார்.

பத்தாண்டுக் காலம் பாரதியார்க்கு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது பாசங் காட்டியும்
பிறர்க்குத் தெரியாமல் வயிற்றிலே
சோற்றைக் கட்டிககொண்டு போய் ஊட்டியும்
வந்தவர்தாம் பாரதிதாசனார்.

இப்படியாகப் பாரதியின் தேர்வுத் 'தராசில்'
கனகசுப்பு ரத்தினம் நின்றார்
அவர் நட்பினை வென்றார்!
(பாரதியின் 'தராசு' படித்துப் பாருங்கள்!
நான் சொல்வது புரியும்!).

எங்கிருந்தோ வந்தான் தமிழச் சாதி
நானென்றான் இங்கிவனை யான்பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதியார்,
கனகசுப்பு ரத்தினத்தைத் தோழனாகவே ஏற்றுக்
கொண்டார் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

சுருக்கமாகச் சொன்னால்,
பாரதியாருக்கு இருந்த இலக்கண, இலக்கிய அறியாமை
கனகசுப்பு ரத்தினத்தின் நட்பால், தொடர்பால் வற்றியது!

பாரதியின் எளிய தமிழ் புலமை மிடுக்கேறிய
கனகசுப்பு ரத்தினத்தைப் பற்றியது.
இவ்வண்ணம்,
பாரதியார்,
பாரதிதாசனால் நன்மைகள் பல பெற்றதும்
பாரதிதாசன் கவிதை நடை
பாரதியாரால் புதுப் பொலிவு உற்றதும்
வரலாற்று உண்மைகள்!

எனவே,
பாரதிக்குத் தாசன் என்று பெயரை மாற்றிக்கொண்ட
காரணத்தாலேயே
பாரதிக்கு அவர் சீடன் என்று அவசரமாக
முடிவு கட்டாதீர்கள் - தவறாக
முரசு கொட்டாதீர்கள்!

(இத்துடன் இது முடிந்தாலும்,
முடிந்தால் மேலும் தொடரும்)

இன்றைய நாள் -
புரட்சிக் கவி பாவேந்தர் பிறந்த நாள்!
தமிழுக்கே தன்னைத் தந்த அந்த
அமுதுக்கு இந்தப் படைப்பு, காணிக்கை!
நட்புடன்
பெஞ்சமின் லெபோ_..
******************************************************

No comments: